இஸ்லாமிய சமுதாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கட்டாய திருமணப் பதிவு சட்டத்தின் பாதக அம்சங்களை மாற்றக் கோரி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பல மாதமாக விழிப்புணர்வு பிரச்சாரங்களை தமிழக மெங்கும் நடத்தி வருவதோடு தமிழக அரசிற்கும் கோரிக்கையை வைத்து வருகிறது.
அந்த பாதக அம்சங்கள் எல்லாவற்றையும் அனைத்து முஸ்லிம் ஜமாஅத் தலைவர்களையும் சந்தித்து விளக்கி, தமிழக அரசு நடைமுறைப் படுத்தியுள்ள கட்டாய திருமணப் பதிவு சட்டத்தை திருத்த கேட்டுக் கொண்டது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எடுத்த முயற்சியின் பலனாக அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்று கூடி ஒரு கமிட்டியை சென்ற மாதம் 17ஆம் தேதி உருவாக்கியது.
9 பேர்கள் கொண்ட அந்த வல்லுநர் குழு இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனை இன்று (06.03.2010) சந்தித்தது. அவரிடம் கட்டாய திருமணப் பதிவு சட்டத்தின் பாதகங்களை விளக்கியது. அதை புரிந்து கொண்ட அமைச்சர், முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளாது, முஸ்லிம் அமைப்புகள் கேட்கும் பிரகாரம் இச்சட்டத்தின் அம்சம்கள் சீர்திருத்தப்படும் என்றார்.
அதற்கு பதில் அளித்த முஸ்லி்ம் அமைப்பின் தலைவர்கள், 800 வருடங்களுக்கு மேலாக தஃப்தர் எனும் திருமணப் பதிவு புத்தகத்தில்தா ன் நாங்கள் திருமணத்தை பதிவு செய்து வருகிறோம். நாங்கள் கொடுக்கும் அந்த பதிவை அப்படியே எடுத்துக் கொண்டால் போதும் என்றனர். அதை அப்படியே எடுத்துக் கொள்ள அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைத்தலைவர் முனீர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் அமைச்சருடன் உள்துறை செயலாளர் மாலதி, தலைமை பதிவாளர் சிவக்குமார், துணை பதிவாளர் ஜஃபர் ஸாதிக், துணை முதல்வரின் துணைச் செயலாளர் ரகுபதி, சட்டத்துறை செயலாளர் ஜானகி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இருந்தனர்.
முஸ்லிம் அமைப்புகள் சார்பாக முஸ்லிம்லீக் தலைவர் பேராசிரியர் காதர் முஹைதீன், தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், இதஜ துணைத் தலைவர் முஹம்மது முனீர், ஜமாஅத்தே இஸ்லாமிய செயலாளர் சிக்கந்தர், தேசியலீக் தலைவர் பஷீர் அஹ்மது, ஜமாஅத்துல் உலமா தலைவர் இல்யாஸ் ரியாஜி, மறுமலர்ச்சி முஸ்லிம்லீக் தலைவர் உமர் ஃபாரூக், அனைத்து அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் அப்போலா ஹனீஃபா மற்றும் வழக்கறிஞர் ஜீவா கிரிதரன் ஆகியோர் சந்தித்தனர்.


