அல்லாஹ்வின் திருப்பெயரால்..

சேலம் மாநகரிலிருந்து 15வது கி.மீ-ரில் இருக்கிறது சேலத்தாம்பட்டி என்கிற புறநகர் பகுதி. ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இங்கு முற்றிலும் ஏழை எளிய மக்கள் நிறைந்து வாழும் அடுக்கு மாடி குடியிருப்புக்களில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் முஸ்லிம் சமுதாய மக்கள். பெயரளவில் முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை முறையில் மாற்று மத கலாச்சாரமே இரண்டற கலந்து இருந்தது..!
இந்நிலையில் இம்மக்களின் நிலை கண்டு கவலை கொண்டவர்களாக இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் ஏகத்துவ பிரசாரக்குழு கடந்த (07 .02 .2010) ஞாயிற்றுக்கிழமை சேலத்தாம்பட்டி நோக்கி பயணித்தது. சேலத்தாம்பட்டி குடியிருப்புக்களில் வாழும் முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் திரட்டி பிரச்சாரம் செய்வது என்கிற நோக்கில் முதல் நாளே (06 .02 .2010) நள்ளிரவு 12.00 மணிவரை மக்களை நேரடியாக சந்தித்து கூட்டத்திற்கு அழைப்புவிடுவிக்கப்பட்டது.
இதன் பயனாக 07 .02 .2010 .ஞாயிற்றுக்கிழமை மாலை 6 .00 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஓர் குடியிருப்பு வளாகத்தில் மக்கள் திரளத் தொடங்கினர்.. அடுத்த அரை மணி நேரத்தில் சுமார் 150-க்கும் மேற்ப்பட்ட ஆண்களும்,பெண்களும் குழந்தைகளுமாக திரண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது,
சரியாக மாலை 06.30 மணிக்கு கூட்டம் தொடங்கப்பட்டது கூட்டத்தில் துவக்கமாக கூட்டத்திற்கு தலைமை ஏற்று அறிமுக உரை நிகழ்த்திய இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சேலம் மாவட்ட தலைவர் முஹம்மத் ஹுஸைன், நமது இந்திய தவ்ஹீத் ஜமாத் பணிகள் பற்றியும், நாம் எதற்க்காக தங்களை சந்திக்க வந்திருக்கிறோம் என்பது பற்றியும் ரத்தினச் சுருக்கமாக சிற்றுரையுடன் கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து மக்களிடையே எழுச்சி உரையாற்றிய இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைமை நிலைய செயலாளர் முஹம்மத் முஹைதீன் அவர்கள் தன்னுடைய உரையில் இஸ்லாம் என்றால் என்ன.? முஸ்லிமின் பண்புகள் என்ன..? இஸ்லாத்தின் கடமைகள் ,கடவுட் கொள்கை உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை தனக்கேயுரிய பாணியில் மிக அழகாக கணீர் குரலில் விளக்கினார். தன் உரைக்கு இடை இடையே மக்களிடம் இஸ்லாத்தின் பல்வேறு அடிப்படைக் கேள்விகளை எழுப்பி அவர்களுக்கு விளக்கம் கூறினார்.
ஒரு கட்டத்தில் கூட்டத்தில் இருந்த ஒரு முஸ்லிம் சகோதரரை பார்த்து "அல்லாஹுவால் நமக்கு அனுப்பப்பட்ட நபி யார்...? ஆனால் அந்தச் சகோதரரோ..! ...நமக்கு என்னங்க தெரியும்..? நீங்க சொன்னாதானே தெரியும்..! என்று கூறிய போது ஒரு நொடி நமக்கு சிரிப்பு வந்தாலும் ...அந்த மக்களின் நிலையை நினைத்து பார்த்து இதயம் வலித்தது யதார்தமான உண்மை..!
நிசப்தமான அந்த சூழலில் மறுமை பற்றியும், மரணத்தைப் பற்றியும், செவியுற்று கட்டுண்டு இருந்த மக்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் தங்கள் கைக் குழந்தைகளுடன் கூட்டம் முடியும் வரை இரவு 09.45 மணி வரையிலும் அமர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக சேலம் மாவட்ட செயலாளர் M .பக்கீர் ஒலி நன்றி உரையுடன் கூட்டத்தை நிறைவு செய்தார். கூட்டத்தில் D .ஜைனுல் ஆபிதீன். சேலத்தாம்பட்டி.சாகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .


