கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு சாதகத்தைவிட, பாதகமே அதிகம் ஏற்படும் என்றார் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா மாநில துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது ஸுல்தான் ரஸாதி.
கரூர் மாவட்டம், பள்ளபட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்டாயத் திருமண பதிவு விளக்கப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி: 'திருமணம், ஜனாஸா என்ற 2 நிலைகளில்தான் முஸ்லிம் சமுதாயம் கட்டுக்கோப்புடன் உள்ளது. இதற்குப் பாதகம் ஏற்படும் விதத்தில்தான், கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது.
3 முதல் 5 தலைமுறைகளாக உள்ள முஸ்லிம்கள் திருமணப் பதிவேடு இன்றும் பத்திரமாக உள்ளது. இந்த முறை வேறு எந்த மதத்திலும் இல்லை. பல நூற்றாண்டு காலமாகக் கட்டுப்பாட்டைக் காத்து வரும் ஜமாஅத்தையும், முஸ்லிம்களின் ஒற்றுமையையும் பாதிக்க கூடிய வகையில் அமைந்துள்ளது இந்தப் புதிய சட்டம்.
திருமணம், விவாகரத்து, சொத்துரிமை ஆகிய மூன்றையும் மத வழக்கப்படி செய்து கொள்ளலாம் எனச் சிறுபான்மை மக்களுக்கு உரிமை கொடுக்கப்பட்டிருந்தது. இந்தச் சட்டத்தால் முஸ்லிம்களின் உரிமை பறிக்கப்படுகிறது.
கட்சிப் பொறுப்புகள் மற்றும் பதவியில் இருக்கும் முஸ்லிம் பொறுப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஷரீயத் சட்டத்தின் விளக்கம் முழுமையாகத் தெரிந்திருக்க நியாயமில்லை. இதனால், அரசு கேட்கும் மத ரீதியான கேள்விகளுக்குச் சரியான விளக்கம் கூற முடியாத நிலை ஏற்படலாம். எனவே, மதம் சார்ந்த முடிவுகளை அரசு எடுப்பதற்கு முன்னதாக, மார்க்க அறிஞர்களிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அரசு தவறிவிட்டது.
பள்ளிவாசல்களில் திருமணம் பதிவு செய்யும் முறை 300 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கொண்டு இந்தச் சட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், தமிழகத்தில்தான் முதன் முதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி முஸ்லிம் பெருமக்கள் சார் பதிவாளர் அலுவலகத்தில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்றால், இங்குள்ள பல்வேறு பாமர மக்களுக்குச் சிரமம் ஏற்படும். அதனால். இந்த சட்டத்தில் விதிவிலக்கு அளிக்க வேண்டும். மேலும், குரானில் கூறியுள்ள சட்ட, திட்டக் கட்டுப்பாடுகளை மீறும் விதத்தில் இதன் விதிமுறைகள் அமைந்துள்ளன.
பொது சிவில் சட்டத்தைத் திணிக்கும் வகையில், வெள்ளோட்டம் பார்க்க கொண்டுவரப்பட்ட முதல் சட்டமாகத்தான் இது உள்ளது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், முஸ்லிம்களின் ஷரீயத் சட்டம் கேள்விக்குறியாகிவிடும்.
எனவே, தற்போது நடைமுறையில் இருந்து வரும் ஜமாஅத் மூலம் நடைபெற்று வரும் திருமணப் பதிவுச் சட்டத்தை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தச் சட்டம் தொடர வேண்டும். முஸ்லிம்களுக்கு வேறு ஒரு புதிய திருமணப் பதிவுச் சட்டம் தேவையில்லை. சார் பதிவாளர் நடத்தி வைக்கும் திருமணங்களைவிட, ஜமாஅத் மூலம் என்ஓசி பெறப்பட்டு நடத்தப்படும் திருமணமே உண்மைத்தன்மை உடையதாக இருக்கும்.
குறிப்பாக, முஸ்லிம் மதப்படி திருமணங்களில் சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அதாவது, முஸ்லிம் குடும்பங்களில் உடன் பிறந்த சகோதரி மகன் அல்லது மகளைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. ஆனால், மற்ற மதங்களில் இது நடைமுறையில் உள்ளது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் இது போன்ற மார்க்க நெறிமுறைகளை மீறும் நிலை உருவாகும்.
எனவே, இந்தக் கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். முஸ்லிம்களுக்கு சாதகமான விதிவிலக்கு அளிக்கும் வரை, தமிழ்நாட்டில் உள்ள எந்த முஸ்லிம் மக்களும் சார்பதிவாளர் அலுவலகம் சென்று திருமணப் பதிவு செய்யமாட்டார்கள்.
கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு சாதகத்தைவிட, பாதகமே அதிகம் ஏற்படும் என்றார் அவர். இந்த அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளர் டி.எம்.ஏ. முபாரக் பாட்ஷா நிர்வாகிகள் உடனிருந்தனர்.
நன்றி : தினமணி.

