நைஜீரியாவின் ஜோஸ் நகரில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் 149 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜோஸ் நகரில் இருநாட்களாக நடைபெற்ற மோதல் நடவடிக்கைகளிலேயே இப்பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
பெரிய அளவில் புதைகுழி ஒன்றைத் தயார் செய்து வருவதாக பள்ளிவாசல் அலுவலர்களும் மதகுருமார்களும் தெரிவித்துள்ளனர். இம்மோதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கைகள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. சட்டத்தை அமுல்படுத்தி நிலைமையைச் சீர்செய்யுமாறு நைஜீரியாவின் துணை ஜனாதிபதி காவல்துறை மற்றும் இராணுவத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.
மோதல் நடைபெற்ற பகுதிகளில் 24 மணிநேர ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிய இம்மோதல் நடவடிக்கைகள் தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்ற வண்ணம் உள்ளன. தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் அப்பகுதிகளில் கேட்கக் கூடியதாக இருப்பதுடன் சில கட்டிடங்களும் தீப்பற்றி எரிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2003 இல் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் 200 பேரும், 2001 இல் நடைபெற்ற கலவரத்தில் 100 பேர்களும் பலியாகினர் என்பது வருந்தக்க விஷயமாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டுள்ள இவ்வன்முறைச் சம்பவங்களால் 3000 இற்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து உள்ளனர்.
தகவல் : கீழை ஜமீல்.


