மத்திய, மாநில அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.
மதம் மற்றும் மொழி சிறுபான்மை மக்களின் நிலை பற்றி ஆய்வு செய்து அவர்களது முன்னேற்றத்திற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் தேசிய கமிஷன் அமைக்கப்பட்டது. இதன் அறிக்கையை மக்களவையில் நேற்று சிறுபான்மை மக்கள் நலனுக்கான அமைச்சர் சல்மான்கான் குர்ஷித் தாக்கல் செய்தார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
- மத்திய, மாநில அரசுகளில் எல்லா பணிகளிலும் முஸ்லிம்களுக்கு 10 சதவீதமும், பிற சிறுபான்மை யினருக்கு 5 சதவீதமும் இடஒதுக்கீடு தர வேண்டும்.
- 10 சதவீத இடங்களை நிரப்ப முஸ்லிம்கள் கிடைக்காவிட்டால், பிற சிறுபான்மை இனத்தவர்களுக்கு அதை வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பரிந்துரைக்கப்பட்ட 15 சதவீத இடஒதுக்கீட்டை பெரும்பான்மையினருக்கு வழங்க கூடாது.
- எல்லா மதங்களில் உள்ள தலித் மக்களுக்கும் எஸ்.சி. அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். முஸ்லிம், கிறிஸ்தவர், ஜெயின், மற்றும் பார்சிகளுக்கு எஸ்.சி. (தாழ்த்தப்பட்டோர்) அந்தஸ்து தர மறுக்கும் 1950ம் ஆண்டின் எஸ்.சி. உத்தரவை தடை செய்ய வேண்டும்.
- அரசு பணிகளில் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் குறைந்த அளவில் தான் உள்ளனர். இன்னும் சில இடங்களில் அவர்களுக்கு பிரதிநிதித்துவமே இல்லை. இந்நிலையை கருத்தில் கொண்டு மேற்கண்டவாறு பரிந்துரைக்கப்படுகிறது.
- இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தகவல் : அதிரை ஹஸன்.


